‘நிச்சயம் இது அந்த மாதிரியான படம்தான். விவகாரமான சப்ஜெக்ட்தான்’ என டிரெய்லர் மூலமாக உறுதிப்படுத்தி உசுப்பேற்றி ஆடியன்ஸை மூடாக்கி சூடாக்கியிருக்கிற ‘ஹாட் ஸ்பாட்.’
படம் இயக்கும் வாய்ப்புக்காக தன்னிடம் கதை சொல்ல வந்தவர்கள் சொன்ன கதைகள் எதிலும் திருப்தியடையாத அந்த தயாரிப்பாளர், தன்னிடம் வித்தியாசமான கதை இருப்பதாக சொல்கிற இளைஞனிடம் கதை கேட்க நேரம் ஒதுக்கி உட்கார்கிறார். அவன் அவரிடம் சொன்ன கதைகள் ஆடியன்ஸை உட்கார வைக்கும் விதத்தில் இருந்ததா? தயாரிப்பாளருக்குப் பிடித்ததா? அவனுக்கு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததா? இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறது இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் திரைக்கதை…
படத்தில் மொத்தம் நான்கு கதைகள். முதல் கதை காலம் காலமாக மணமகளுக்கு மணமகன் தாலி கட்டும் வழக்கத்தை தலைகீழாய் புரட்டிப் போட்டு மணமகள் மணமகனுக்கு தாலி கட்டுகிற வித்தியாசத்தை சுமந்திருக்கிறது. மருமகள் மாமியார் கொடுமையை அனுபவிப்பதுபோல், மருமகன் மாமனார் கொடுமைக்கு ஆளாவதெல்லாம் இந்த கதையிலிருக்கும் சுவாரஸ்யங்கள். இதில் ஹீரோவாக நடித்திருக்கிற ஆதித்யா பாஸ்கர் கழுத்தில் தாலியைத் தொங்கவிட்டபடி மனைவிக்கு பெட் காபி போட்டுக் கொடுப்பது, வீட்டு வேலைகள் மொத்தத்தையும் இழுத்துப் போட்டு செய்யும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவது, அது குறை இதில் குறை என புகுந்த வீட்டாரிடம்(?!) திட்டு வாங்குவது என நீளும் காட்சிகளில் வெகுளித்தனமான நடிப்பைத் தந்து ரசிக்க வைக்கிறார். அவருக்கு ஜோடியாக வருகிற கெளரி கிஷனின் நடிப்பும் கச்சிதம். இந்த ஜோடியை எங்கோ பார்த்தது போலிருக்கலாம். ’96’ படத்தில் இளவயது விஜய் சேதுபதி, திரிஷாவாக நடித்தது இவர்கள்தான்.
இரண்டாவது கதையில் ஒரு காதல் ஜோடி தங்கள் வீட்டில் கல்யாணப் பேச்சு வார்த்தையைத் துவங்கியபோது, உறவு முறையில் சிக்கல் உருவாக அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை கிளைமாக்ஸாக கொண்டிருக்கிறது. இந்த கதையில் டான்ஸ் மாஸ்டர் சாண்டியும் அம்மு அபிராமியும் பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். காதலுக்கு சம்மதம் வாங்க அம்மு அபிராமி செய்யும் குறும்பான சூழ்ச்சி கொஞ்சம் அப்படி இப்படியிருந்தாலும் ரசிக்க முடிகிறது.
மூன்றாம் கதையில் இளைஞன் ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் விலை மாதனாகிறான். ஒரு கட்டத்தில் அவன் யாரை எந்த இடத்தில் எந்த சந்தர்ப்பத்தில் பார்க்ககூடாதோ அந்த இடத்தில் அந்த சந்தர்ப்பத்தில் பார்ப்பதெல்லாம் இந்த கதையில் ‘என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க’ என கொதித்துக் கொந்தளிக்க வைக்கும் சமாச்சாரங்கள். சுபாஷும் ஜனனியும் கதை எதிர்பார்க்கிற அத்தனை அசிங்கத்தையும் அருவருப்பையும் தங்கள் நடிப்பின் மூலம் அரங்கேற்றியிருக்கிறார்கள்.
ரியாலிடி ஷோக்களுக்காக தயார்படுத்தப்படும் சிறுவர் சிறுமிகள் தொலைக்கிற இனிமையை, சந்திக்கிற கொடுமையை நான்காவது கதை நறுக்கென்றும் சுறுக்கென்றும் எடுத்துச் சொல்லியிருக்கிறது. கலங்கவைக்கும் கதைக்கேற்ப கனமான நடிப்பைத் தந்திருக்கிறது கலையரசன், சோபியா ஜோடி.
தயாரிப்பாளரிடம் கதை சொல்பவராக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கே நடித்திருக்க, அவர் கதை சொல்லும் விதமும் தயாரிப்பாளரிடம் காட்டும் தெனாவட்டும், தெனாவட்டு காட்டுவதன் பின்னணியும் கலகலப்பூட்டுகிறது. படத்தில் அவர் சொல்லும் கதைகளைக் கேட்கிற தயாரிப்பாளர் இந்த படத்தின் நிஜமான தயாரிப்பாளர் என்பது கொசுறு செய்தி.
மற்ற நடிகர் நடிகைகளின் பங்களிப்பு நிறைவு.
சாம் சி.எஸ். திகில் கதை, திரில்லர் கதை, சிரிப்புக் கதை, சீரியஸ் கதை என எல்லாவற்றுக்கும் பொருந்தும்படியான பின்னணி இசையைக் கலந்து கட்டி பரிமாறியிருக்க, காட்சிகளுக்கு உயிரோட்டம் தர சில பாடல்களும் அணிவகுக்கின்றன.
ஒளிப்பதிவு நேர்த்தி.
வில்லங்கமான விஷயங்களை விபரீதமான முறையில் அணுகியிருக்கிற படம்தான்; மாற்றுக் கருத்தில்லை. படத்தில், நாட்டில் நடக்காத எதையும் சொல்லவில்லை என்பதை மறுப்பதற்கில்லை.