தளபதி விஜய் நடிக்க, வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 25வது படைப்பாக பெரும் பொருட்செலவில் உருவான ‘கோட்’ படத்தின் டிரெய்லர் பரபரப்பு காட்சிகளுடன் வெளியாகி எக்கச்சக்கமாய் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகிறது.
அதையடுத்து படம் குறித்து பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, “இது கற்பனை கதை என்ற போதிலும் உண்மைக்கு நெருக்கமாக இந்த படத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்திய உளவு அமைப்பான ரா’வின் ஒரு பிரிவான தீவிரவாத எதிர்ப்பு படையில் விஜய் மற்றும் அவரது குழுவினர் பணியாற்றுகிறார்கள். கடந்த காலத்தில் அவர்கள் செய்த செயல் ஒன்று தற்போது ஒரு பிரச்சினையாக வெடிக்கிறது. விஜய்யும் அவரது குழுவினரும் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை. நான்கு ரா அதிகாரிகளை சுற்றி நடக்கும் இந்த கதை சாகசம் நிறைந்த சண்டை காட்சிகளோடு உருவாகியுள்ளது. விஜய்யின் அதிரடி நடிப்பு திரைப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும்” என்றார்.
படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி பேசியபோது, “தளபதி விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் குழுவினருடன் இணைந்து ‘கோட்’ திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்குவதில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் பெருமிதம் அடைகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள டிரைலர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்ட காட்சிகளின் ஒரு சிறு துளியே ஆகும். இந்த திரைப்படத்தை உருவாக்குவதில் நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தோமோ அதே மகிழ்ச்சியை ‘கோட்’ படத்தை திரையில் காணும் போது ரசிகர்களும் அடைவார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.