இந்திய ராணுவத்தின் முன்னாள் அதிகாரியொருவர் ஏலியன்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு மறைவிடத்தில், ஏ ஐ எனப்படுகிற செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் துணையோடு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டு வாழ்நாளைக் கடத்திவருகிறார். அவருடன் இரு உதவியாளர்களும் இருக்கிறார்கள்.
அந்த அதிகாரியைப் பற்றிய ஆவணப்படம் எடுக்க தீர்மானித்த டிவி சேனல் குழுவினர் அவரை நேரில் சந்திக்கிறார்கள். அவர் ராணுவத்தில் பணியாற்றியபோது, நம் நாட்டைக் காப்பாற்றும் நோக்கத்தில் ஏலியன்களுடன் போராடிய கடந்த கால நிகழ்வுகளை அவரது உதவியாளர்கள் டிவி சேனல் குழுவினருக்கு சொல்கிறார்கள். அந்த நிகழ்வுகள் போர்க்களம், ஏலியன் வருகை என நிமிர்ந்து உட்கார வைக்கும் விதத்திலான பிளாஷ்பேக் காட்சிகளாக விரிகின்றன…
இதென்ன பிரமாதம், ஸ்பெஷல் ஐட்டம் ஒண்ணு இருக்கு’ என்பதுபோல, ராணுவ அதிகாரி உள்ளிட்ட மூவருடன் ஒரு ஏலியன் வந்து இணைகிறது. அந்த ஏலியன் உள்ளூர் அழகி, உலக அழகி என அத்தனைப் பேரையும் தூக்கிச் சாப்பிடும்படி அத்தனை பேரழகியாக இருக்க, அதிகாரியின் உதவியாளர்களில் ஒருவருக்கு அந்த ஏலியன் மீது காதல் உருவாகிறது.
இப்படி போர், ஏலியன் வேட்டை என பிளாஷ்பேக் ஒரு பக்கம் சீரியஸாக கடந்தோட, ஏலியனுக்கும் நம்மூர் ஆசாமிக்குமான காதல் ரசிக்கவைக்கும் காமெடி களேபரமாக தொடர…
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். இந்த கதை நடக்கும் காலகட்டம் 2040. அந்த ஏலியனுக்கு வயது கிட்டத்தட்ட 250.
கதையில் சுவாரஸ்யமும், திரைக்கதையில் பரபரப்பும் கலந்துகட்டி டிஸ்டோபியன் சயின்ஸ் பிக்சன் ஜானரில் படத்தை இயக்கியிருக்கிறார் அருண் சந்து.
கே.பி.கணேஷ்குமார் ராணுவ அதிகாரியாக நடித்திருக்க, அவரது உதவியாளர்களில் ஒருவராக வருகிற கோகுல் சுரேஷ் (நடிகர் சுரேஷ்கோபியின் மகன்) ஏலியனை காதலிக்கிற காட்சிகளில் ரசிக்கவும் எளிமையான நடிப்பால் கவனிக்கவும் வைக்கிறார். இன்னொரு உதவியாளராக வருகிற அஜூ வர்கீஸின் நடிப்பும் கச்சிதம்!
அழகான பெண் ஏலியனாக வருகிற அனார்கலி மரைக்காயருக்கு வசனங்கள் இல்லாததால், முகபாவங்களாலும் கண்களாலும் கதை கேட்கிற உணர்வுகளை பரிமாறியிருக்கிறார். மற்ற நடிகர்களும் அவரவர் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.
கலை இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் அதிகமாக உழைக்கும்படியான கதைக்களம். அதை உணர்ந்து முழு ஈடுபாட்டுடன் இயங்கியிருப்பது காட்சிகளின் தரத்தில் தெரிகிறது. பின்னணி இசையும் படத்துக்கு பலம்.
உருவாக்கத்தில் கதைக்கேற்ற பிரமாண்டம் குறைவாக இருந்தாலும், இயற்கை வளம் அழிந்தது எதனால், வழக்கத்துக்கு மாறான அதிகப்படியான மழை பெய்வது எதனால் என அக்கறையுடன் சில விஷயங்களை அலசியிருக்கிற இயக்குநர் பாராட்டுக்குரியவர்.

