பாலியல் குற்றங்களை பலவிதவிதமாகச் செய்து சட்டத்தின் பிடியில் சிக்கிய நாகர்கோவில் இளைஞனின் கதையை ஒருசில மாற்றங்களுடன் திரையில் பார்க்கிற வாய்ப்பைத் தருகிற ‘ஃபயர்.’
பிசியோதெரபிஸ்ட் காசி, திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்கிற, கணவனை இழந்து தவிக்கிற பெண்களைக் குறிவைத்து பேச்சாலும் செயல்பாடுகளாலும் அவர்களின் மனதுக்கு ஆறுதலாக நடந்து கொள்கிறான். அதில் அவர்கள் மயங்கிவிட விருப்பம்போல் அனுபவித்து காமப் பசியை தீர்த்துக் கொள்கிறான். அனுபவித்ததை வீடியோ எடுத்து மிரட்டுகிறான்; பணம் பறிக்கிறான்.
அவன் திடீரென ஒருநாள் காணாமல் போக, அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் மீது போலீஸுக்கு சந்தேகம் உருவாகிறது. அதற்குள் எங்கிருந்தோ ஒரு பெரியவர் வந்து, காசியை தான் கொலை செய்ததாக சொல்லி போலீஸில் சரணடைகிறார்.
கதை இப்படி சூடுபிடிக்க, உண்மையில் காசிக்கு என்னவானது என்பது அடுத்தடுத்த காட்சிகளில்…
காசி கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிற பாலாஜி முருகதாஸ் பெண்களை மயக்கி அனுபவிப்பதெல்லாம் டிரிபிள் எக்ஸ் ரகம். மனிதர் புகுந்து விளையாடியிருக்கிறார்.
தங்களிடம் அத்துமீறும் காசிக்கு உடலழகை திறந்தது காட்டுவதில், எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு எல்லை மீறியிருக்கிறது சாந்தினி தழிழரசன், ரக்சிதா மகாலெஷ்மி, சாக்சி அகர்வால், காயத்ரி ஷான் கூட்டணி. பாடல் காட்சியில் ரக்சிதா பரிமாறியிருக்கும் கவர்ச்சி விருந்து ரொம்ப ஹெவி.
வெறுமனே கவர்ச்சி காட்டுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் கதையின் தேவைக்கேற்ப பொருத்தமாக நடித்திருப்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
காசி எங்கே, அவனுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறியும் இன்ஸ்பெக்டராக வருகிற இந்த படத்தின் இயக்குநர் ஜே எஸ் கே தன் நடிப்பில் மாறி மாறி காட்டியிருக்கும் வேகமும் நிதானமும் கவர்கிறது.
அமைச்சராக சிங்கம்புலி, போலீஸ் அதிகாரிகளாக அனு விக்னேஷ், சுரேஷ் சக்கரவர்த்தி என மற்றவர்கள் கதையோடு இணைந்து பயணித்திருக்கிறார்கள்.
ரக்சிதாவின் பெர்ஃபாமென்ஸால் கிறக்கமூட்டும் மெதுமெதுவாய்’ பாடல் டி கே.வின் இதமான இசையாலும் ரசிக்க வைக்கிறது. டும்டும்’ பாடலில் உற்சாகம் ததும்புகிறது.
சதீஷ் ஜி.யின் ஒளிப்பதிவில் எளிமையும் நேர்த்தியும் தெரிகிறது.
பாலியல் குற்றவாளி ஒருவனின் கதையை வெளிப்படைத் தன்மையோடு காட்சிப்படுத்திய விதத்திற்காக சென்ஸாரில் ‘ஏ’ சர்டிஃபிகேட் பெற்றிருக்கும் இந்த ஃபயர், கிளைமாக்ஸில் தருகிற விழிப்புணர்வுக் கருத்து பாராட்டு சர்டிஃபிகேட் பெறும் விதத்திலிருக்கிறது.