‘விண் ஸ்டார்’ விஜய், மாஸ் ஹீரோக்கள் யாருக்கும் நான் சளைத்தவன் இல்லை என்கிற ரேஞ்சுக்கு கதை திரைக்கதை எழுதி, இயக்கி இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் படம்.
தேசிங்கு ராஜா காவல்துறை பணியில் நேர்மையாக இருப்பதால், சிலரால் தாக்கப்பட்டு பணியிட மாறுதலை சந்திக்கிறார்.
‘வாலிபால்’ சாம்பியனான இன்னொரு ராஜாவின் வளர்ச்சியை தடுக்க ஒரு தரப்பு முயற்சி செய்கிறது.
அந்த இருவரின் தங்கை கடத்தப்படுகிறாள். அண்ணன்கள் இருவரும் தங்கையை மீட்க களமிறங்குகிறார்கள். அதன் பின் என்னவானது என்பதே கதையின் போக்கு.
போலீஸ் அதிகாரி தேசிங்கு ராஜாவாக வருகிற விஜய், உயிருக்கு ஆபத்தான சூழலில் சிக்கிய பெண் பத்திரிகையாளரை காப்பாற்றும் ஆரம்பக் காட்சியே அதிரிபுதிரியாக இருக்கிறது. சென்னையிலிருந்து மதுரைக்கு மாற்றலாகி, அங்கு ஒரு பெண்ணுடன் பழக்கவழக்கம் நெருக்கமாகி, அவளை மனைவியாக்கி சீண்டலும் தீண்டலுமாய் பொழுதைக் கழிப்பதெல்லாம் உற்சாக எபிசோடுகள். அவருக்கு ஜோடியாக வருபவரின் இளமை செம செழுமை.
ரசிகைகள் வரிசையாய் வந்து ‘என்னை எடுத்துக்கோ’, ‘என்னை ருசிச்சிக்கோ’ என்கிற அளவுக்கு வட்டமடிக்க, ‘என்னை விட்டுடுங்க, அல்ரெடி ஆள் இருக்கு’ என ஓட்டம் பிடிக்கும் வாலிபால் ராஜா கலகலப்புக்கு கணிசமான உத்தரவாதம் தருகிறார். அவரது காதலியாக வருபவரின் சிரிப்பு அத்தனை அழகு.
இரண்டு ராஜாக்களும் அடிக்கடி குளோசப்பில் முகம் காட்ட பஞ்ச் டயலாக் பஞ்சமில்லாமல் வந்து விழுகிறது. ஹீரோயின்களுடன் பாடல் காட்சிகளும் உண்டு. படுக்கையறை காட்சிகளில் கிளுகிளுப்பு தூக்கல்!
முன்பைவிட அகலமாகியிருக்கிற கும்தாஜ், வில்லியாக வந்து கொஞ்சலும் மிஞ்சலுமாய் கவர்ச்சி விருந்து படைக்கிறார். வாலிபால் ராஜாவை படுக்கையில் வீழ்த்தும் காட்சி விண் ஸ்டார் லெவலுக்கு அதிகப்படிதான் என்றாலும் ரசிக்க முடிகிறது.
ஜோ மல்லூரி, கே எஸ் கே செல்வகுமார், சினிமா பத்திரிகையாளர் கார்த்திக், நமச்சிவாயம், சோமசுந்தரம், லயன் குமார், ஜெயவேல் என மற்ற நடிகர்கள் பங்களிப்பில் குறையில்லை.
பின்னணி இசை, பாடல்களுக்கான இசை, ஒளிப்பதிவு என மற்ற அம்சங்களுக்கு பாஸ்மார்க் போடலாம்.
படத்தின் உருவாக்கம் அப்படி இப்படியிருந்தாலும் விண் ஸ்டாரின் முயற்சி பாராட்டுக்குரியதுதான்.
எப்போதும் ராஜா – ராஜ்ஜியம் பெரிது; ஆளுமை சிறிது.