ஒரு மாநிலமோ, நாடோ அது எல்லா விதத்திலும் செழிப்பாக இருக்க வேண்டுமானால் ஆட்சிக்கு யார் வரலாம் என்பதைவிட யார் வரக்கூடாது என்பது முக்கியம். கேரளா இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறது. அதை மையப்படுத்தி அதிரிபுதிரி சம்பவங்களை அன்லிமிடெடாக அப்லோடு செய்து, பிரமாண்டத்தில் பிரமிக்க வைத்திருக்கிறது மோகன்லால் _ பிரித்விராஜ் கூட்டணி.
லூசிபரில் ஸ்டீபன் நெடும்பள்ளி (மோகன்லால்) யாரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தாரோ அந்த முதலமைச்சர் ஊழலில் ஊறி, மாநிலத்தை மதவாத சக்தி கொண்டோரிடம் ஒப்படைக்க திட்டமிடுகிறார். உலகளவில் போதைப் பொருள் கடத்தல் காரர்களை தன் அதிரடி அட்டாக்குகளால் அலற வைத்துக் கொண்டிருக்கும் ஸ்டீபன் நெடும்பள்ளிக்கு இந்த விஷயம் தெரியவருகிறது. ஆத்திர ஆவேசம் பொங்குகிறது. அதே ஆத்திர ஆவேசத்தோடு மாநிலத்தை காப்பாற்ற கேரள மண்ணில் கால் பதிக்கிறார். அதன்பிறகு நடக்கிற அத்தனையும் அதிரடியின் உச்சம்.
மோகன்லால் படம் தொடங்கி ஒரு மணி நேரம் கழித்துதான் திரைக்குள் வருகிறார்; ஹெலிகாப்டரிலிருந்து படு ஸ்டைலாக இறங்கி நடக்கிற அந்த என்ட்ரியே சிலிர்ப்பூட்டுகிறது. அந்த சிலிர்ப்பு ரசிகனுக்கு அடிக்கடி வரட்டும் என்ற நினைப்பில் எட்டுப் பத்து முறை அதே ஸ்டைலில் வருகிறார்; அதே ஸ்டைலில் நடக்கிறார். உடல்மொழியும் வசன உச்சரிப்பும் உலக லெவல் தாதாவுக்கான கம்பீரத்தைக் கொடுத்திருக்கிறது.
தவறான வழியில் மாநிலத்தை ஆள்கிற முதலமைச்சராக டொவினோ தாமஸ் கணிசமான வில்லத்தனத்தை தன் நடிப்பில் காண்பித்திருக்கிறார்.
தேச விரோதிகளை மோகன்லாலுடன் சுட்டுப் பொசுக்கும் காட்சிகள் போர்க்களமாக விரிய உக்கிரமாக வெளிப்பட்டிருக்கிறார் இயக்குநர் பிரித்விராஜ்.
டொவினோவின் சகோதரியாக வருகிற மஞ்சு வாரியார் ஆட்சிப் பொறுப்பை நோக்கி நகரும் விதமும் அதற்கான நடிப்பும் அட்டகாசம்.
மதவாத தலைமையாக, பஜ்ரங்கியாக வருபவரின் நடிப்பு மிரட்டல்.
சுராஜ் வெஞ்ஞாரமூடு, இந்திரஜித் சுகுமாரன், சுகந்த் கோயல், ஃபாசில், பைஜு சந்தோஷ் என ஏராளமானோரின் நடிப்புப் பங்களிப்பைக் கொட்டிக் குவிக்க, தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவரான கிஷோரும் ஸ்கோர் செய்கிறார்.
கேரளா, வட இந்தியா, ஆப்பிரிக்கா, லண்டன், எகிப்து என பயணிக்கும் கதைக்கேற்ற ஒளிப்பதிவை உலகத் தரத்துக்கு உயர்த்தியிருக்கிறார் சுஜித் வாசுதேவ்.
படத்தின் பிரமாண்டத்தில் சண்டைப் பயிற்சியாளருக்கும் கலை இயக்குநருக்கும் பெரும் பங்கிருக்கிறது.
படத்தின் நீளமும், சில காட்சிகளும் அலுப்பு சலிப்பைத் தூண்டினாலும் மதவாத சக்திகளுக்கு இடம் கொடுப்பது மக்களுக்கு வைக்கும் ஆப்பு என்பதை துணிச்சலான சொல்லியிருக்கும் விதத்தில் எம்புரான் பாராட்டுக்களை அள்ளுறான்!
Rating 3 / 5