சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் ‘EMI; மாதத் தவணை.’ இந்த படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், முழுக்க முழுக்க காமெடி கலந்த சென்டிமென்ட் படமாக உருவாகியுள்ளது.
கதாநாயகியாக சாய் தான்யா நடிக்க, பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், ஓ ஏ கே சுந்தர் லொள்ளுசபா மனோகர், டி கே எஸ், செந்தி குமாரி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் பேசிய இயக்குநர் சதாசிவம் சின்னராஜ், ”இ எம் ஐ படம் என் வாழ்வில் நான் நேரிடையாக பார்த்தது. ஒரு நண்பருக்குத் தொடர்ந்து கால் வந்து கொண்டே இருந்தது ஆனால் அவர் அட்டன் செய்யவே இல்லை, கார் எடுத்துவிட்டு இ எம் ஐ டார்ச்சரை அனுபவித்தார். அதை நேரில் கண்டபோது தான் இது அனைவர் வாழ்விலும் நடக்கும், அதை எடுக்கலாம் என முடிவு செய்தேன்.
இந்தப் படத்தில் சமூகத்திற்கான கருத்தை பேசியுள்ளோம். எல்லோர் வாழ்விலும் இதை அனுபவித்திருப்பார்கள் அதைத்தான் படமாக எடுத்துள்ளோம். நான் முதலில் நடிப்பதாக இல்லை, எந்த ஹீரோவும் சின்ன பட்ஜெட்டுக்கு ஒத்துக்கொள்ள வில்லை அதனால் தான் நானே நடித்து விடலாம் என இறங்கி விட்டேன்.
முதல் முதலில் கதையைப் பேரரசு சாரிடம் சொன்னேன், இப்போது வரை படத்திற்கு அனைத்து உதவிகளும் செய்து வருகிறார். முதலில் 4 பேர் சேர்ந்து தான் தயாரிப்பதாகத்தான் இருந்தது, ஆனால் தயாரிப்பாளர் மல்லையன், நீ ஏன் எல்லோருக்கும் பதில் செய்கிறாய், நானே தயாரிக்கிறேன் என்று, என்னை நம்பி இறங்கினார். அவருக்கு என் நன்றி. நல்ல படம் உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி” என்றார்.
தயாரிப்பாளர் மல்லையன், ”இ எம் ஐ எடுத்து எத்தனையோ பேர் மனநிம்மதி இல்லாமல் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள். பலர் இ எம் ஐ மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களின் கதையை இந்த இ எம் ஐ படம் சொல்கிறது. இ எம் ஐ எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்கிற விழிப்புணர்வை இந்தப்படம் பேசியுள்ளது, அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறேன்” என்றார்.
இயக்குநர் பாக்யராஜ், இயக்குநர் ஆர் வி உதயகுமார், சின்னத்திரை புகழ் ஆதவன், நடிகை சாய் தன்யா, இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன், இசையமைப்பாளர் ஸ்ரீநாத் பிச்சை, இயக்குநர் வெங்கடேஷ், தயாரிப்பாளர் பி எல் தேனப்பன், இயக்குநர் அரவிந்த்ராஜ், நடிகை தேவயானி உள்ளிட்டோரும் நிகழ்வில் படம் குறித்து பேசினார்கள்.