பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள இரண்டாவது படம்; இந்த வார ரிலீஸில் அதிக வரவேற்பை பெற்றுள்ள முதல் படம்.
பிளஸ் டூ வரை நன்றாகப் படித்த ராகவன் கல்லூரிப் படிப்பைத் தொடங்கியபின், ஒரு பெண்ணின் தூண்டுதலால் படிப்பில் கவனம் செலுத்தாமல் சிலபல ரவுடியிஸ சம்பவங்களைச் செய்கிறான். அதனால் மாணவர்கள் மத்தியில் கெத்தாக வலம் வருகிறான். கல்லூரியின் வரலாற்றில் ஒரு மாணவன் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாகிறான். படிப்பில் 48 அரியர்ஸ் வைத்த மோசமான சாதனைக்கு சொந்தக்காரனாகிறான்.
லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் வேலையில் சேர்வதற்காக தவறான வழியில் சான்றிதழ் பெற்று, நினைத்தபடி வேலையில் சேர்ந்து, அசத்தலான கார் ஆடம்பரமான வீடு அதுஇதுவென சொகுசு வாழ்க்கையில் உற்சாகமாக நுழைகிறான்.
தவறான வழியில் கிடைத்த அந்த உற்சாகத்துக்கு ஆப்பு வைக்கும் சம்பவங்கள் நடக்கத் தொடங்குகின்றன.
அந்த சம்பவங்கள் அவனிடமிருந்து எதையெல்லாம் எடுத்துக் கொண்டது, எதை விட்டு வைத்தது என்பது மிச்சமீதி கதை.
அந்த சம்பவங்களில் அவனுக்கு கிடைக்கும் அனுபவங்கள் இன்றைய யங் ஜெனரேஷனுக்கான பாடம். இயக்கம் அஸ்வத் மாரிமுத்து
காலேஜில் பொறுக்கித்தனம் செய்வதில் கவனம் செலுத்துவதால் படிப்பில் தோல்வி, முன்னேற்றம் பற்றி சிந்திக்காததால் காதலில் தோல்வி, முன்னேற்றத்துக்காக தவறான வழிகளை தேர்ந்தெடுத்து அதன் மூலம் கிடைத்த வாழ்க்கையை உற்சாகமாக அனுபவித்தல், மாபெரும் தொழிலதிபரின் மகள் மனதில் இடம்பிடித்தல், தவறுகளை உணர்ந்து திருந்துதல் என ஒவ்வொரு காட்சியிலும் ராகவனாக வருகிற பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் அட்டகாச அதகளம் நிறைந்திருக்கிறது. அந்த ஒல்லிப்பிச்சான் எதை செய்தாலும் தியேட்டரில் நிரம்பியிருக்கும் இளைய தலைமுறை விசிலடித்து கொண்டாடுகிறது. முன்னணி ஹீரோக்களே ரசிகர்களைக் கவர முடியாமல் மூச்சு வாங்கும் சூழலில் பிரதீப்புக்கு கிடைக்கும் வரவேற்பை பார்க்குபோது மனிதர் மச்சக்காரர்தான் என்று தோன்றுகிறது.
வாழ்க்கையில் தோல்வியடைந்த காதலனா? தன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையைத் தருகிற மாப்பிள்ளையா? யாரை தேர்வு செய்வது? இந்த விசயத்தில் தெளிவான முடிவெடுத்து உதவாக்கரை காதலனை கழட்டி விடுகிற யாதார்த்த மனுஷியாக அனுபமா பரமேஸ்வரனின் நடிப்பில் உணர்வோட்டம் ததும்புகிறது.
கட்டுப்பாட்டுக்குள் நிற்கிற கவர்ச்சி, கதையோட்டத்தின் ஒரு பகுதியைத் தாங்கிப் பிடிக்கும் உணர்ச்சிக் குவியலான நடிப்பு இரண்டையும் தந்திருக்கிறார் நாயகனின் இரண்டாவது ஜோடியாக வருகிற கயாது லோகர்.
‘கல்லூரி முதல்வர் இதையெல்லாமா செய்து கொண்டிருப்பார்?’ என்ற கேள்வி மனதுக்குள் உருண்டு திரண்டாலும், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கவனிக்கும்படி செய்திருக்கிறார் கனமான மனிதர் மிஷ்கின்.
ஹீரோவின் தந்தையாக ஜார்ஜ் மரியான், ஹீரோவின் பாஸாக கெளதம்மேனன், தொழிலதிபராக கே எஸ் ரவிக்குமார், நண்பர்களாக வி ஜே சித்து & ஹர்சத் என அத்தனைப் பேரிடமும் கதாபாத்திரங்களின் தன்மையை புரிந்துகொண்ட நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது.
காட்சிகளில் கலகலப்புக்கும் பஞ்சமில்லை.
லியோன் ஜேம்ஸ் இசையில் ‘வழித்துணையே’ பாடல் ‘ஹம்மிங்’கில் கூடவே வந்துவிடுகிறது. ‘ரைஸ் ஆஃப் டிராகன்’ கொஞ்சமாய் மனதில் ஒட்டிக் கொள்கிறது.
கல்லூரிக் கதைக்கான கோணங்களை தனது ஒளிப்பதிவில் கச்சிதமாக கொண்டு வந்திருக்கிறார் நிகேத் பொம்மி.
படத்தில் ரசிப்பதற்கு ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கிறது. மனதில் வைத்துக் கொள்ளவும் ஒரு விஷயம் உண்டு. அது ‘தப்பும் தவறுமான பாதையில் போனால் பணம் கிடைக்கலாம்; மனதுக்கு நிம்மதி கிடைக்காது.’
Rating 4 / 5