பலருக்கும் கொண்டாட்டமாக அமைகிற தீபாவளி, சிலருக்கு எப்போதுமே திண்டாட்டம்தான். அந்த சிலரை மையப்படுத்திய கதைக்களத்தில் ‘தீபாவளி போனஸ்.’
விக்ராந்த், ரித்விகா ஏழ்மை நிலையில் வாழ்கிற தம்பதி. அவர்களுக்கு ஒரு மகன் உண்டு. தீபாவளி நெருங்கிவிட்ட நிலையில் விக்ராந்துக்கு வேலை செய்யுமிடத்தில் போனஸ் கிடைக்க தாமதமாவதால் புதுத்துணி, பட்டாசு என எதையும் வாங்க முடியாத நிலைமை. அந்த நேரமாகப் பார்த்து, ஒருசில மணி நேரம் மட்டும் செய்கிற மாதிரியான தற்காலிக பணி கிடைக்கிறது. அதை செய்தால், கிடைக்கும் வருமானத்தில் தீபாவளியை கொண்டாடி விடலாம் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
மறுநாள் தீபாவளி என்ற நிலையில் விக்ராந்த் அந்த வேலையை ஒத்துக்கொண்டு செய்யும்போது, போலீஸார் அவரை பிடித்துக் கொண்டு போகிறார்கள்.
போலீஸ் பிடியில் சிக்குகிற அளவுக்கு விக்ராந்த் செய்த தவறு என்ன? அவருடைய குடும்பம் தீபாவளியைக் கொண்டாடியதா இல்லையா? இந்த கேள்விகளுக்கான பதில்களே படத்தின் மீதிக் கதை… தளபதி விஜய் ரசிகர்களை உற்சாகப் படுத்தும் விதமான காட்சியொன்றும் படத்தில் உண்டு.
உழைத்தாலும் வறுமைச் சூழலில் வாழ்கிற வலியை, உழைப்புக்கான முன் பணம், ஊக்கத் தொகை கிடைக்காத வேதனையை, அவஸ்தைகளை தாண்டி கிடைத்த பணத்தில் தங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ளும் தருணத்தை தங்கள் நடிப்பில் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள் விக்ராந்தும் ரித்விகாவும். ஜோடிப் பொருத்தமும் கச்சிதம்.
மகனாக வருகிற சிறுவன் ஷரீஸின் நடிப்பின் இயல்புத் தன்மை கதைக்கு பலம். மற்ற முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றவர்களும் தேவைக்கேற்ப நடித்திருக்க, கதையோட்டத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ள பாடல்களை மரிய ஜெரால்டில் இசை இனிமையாக்கியுள்ளது.
ஒளிப்பதிவு நேர்த்தி.
கதையிலிருக்கும் பரபரப்பும் விறுவிறுப்பும் உருவாக்கத்தில் இருக்கும் குறைகளை பின்னுக்குத் தள்ளி விடுகின்றன.
பண்டிகைக் காலங்களை கடப்பதற்குள் ஏழை எளிய மக்கள் எப்படியான நெருக்கடிகளை அனுபவிக்கிறார்கள் என்பதை ஆர்ப்பாட்டமில்லாத எளிய கதை மூலம் பதிவு செய்திருப்பதற்காக அறிமுக இயக்குநர் ஜெ ஜெயபாலுக்கு பாராட்டுக்கள்!
தீபாவளி போனஸ் – கருத்து கனமானாலும் திருப்தி ஆவரேஜ்தான்!