சந்தானம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் அடுத்த பாகமான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ ஃபர்ஸ்ட் லுக் சந்தானத்தின் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டது. ரசிகர்கள் அனைவரையும் கவரும் வகையில் முதல் பார்வை உள்ளது.
நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் மற்றும் தி ஷோ பீப்பிள் நிறுவனங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மே மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த், ‘டிடி நெக்ஸ்ட் லெவெல்’ திரைப்படத்தையும் இயக்குகிறார். முக்கிய வேடங்களில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரேம் ஆனந்த், “‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்போடு பெரும் வெற்றி பெற்றது. அதன் அடுத்த பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை ஒரு வருடமாக தொடர்ந்து செய்து முடித்தோம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரித்து, ரசித்து மகிழும் திரைப்படமாக இதுவும் இருக்கும்.
மிக அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் கதை ஒரு சொகுசு கப்பலில் தொடங்கி தீவு ஒன்றில் நடைபெறும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக பிரம்மாண்ட பட்ஜெட்டில் அரங்கங்களை அமைத்தோம். இப்படத்தை தயாரிப்பதற்காக நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், நடிகர் ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை விட அதிக குதூகலத்தையும் உற்சாகத்தையும் ரசிகர்களுக்கு இப்படம் வழங்கும்” என்றார். கூறினார்.
படக்குழு:- ஒளிப்பதிவை தீபக் குமார் பதி கையாள, ஆஃப்ரோ இசையமைக்கிறார். பரத் படத்தொகுப்புக்கும் ஏ ஆர் மோகன் கலை இயக்கத்திற்கும் பொறுப்பேற்றுள்ளனர்.