குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, சித்தப்பா – மகள் பாசம் இரண்டையும் இணைத்துப் பிணைத்திருக்கும் ‘சித்தா.’
அண்ணன் மகள் சுந்தரியை உயிருக்கு உயிராக பாசம் காட்டி வளர்க்கும் சித்தார்த், நண்பன் வீட்டுக் குழந்தை பொன்னி மீதும் நேசம் காட்டுகிறார். பொன்னி பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள். அந்த பழி சித்தார்த் மீது விழ, சட்டத்தின் பிடியில் சிக்கி மனம் நொறுங்குகிறார். அதேசமயம் சுந்தரி காணாது போகிறாள். போலீஸ் ஒருபுறம், சித்தார்த் இன்னொரு பக்கம் என குழந்தை சுந்தரியை தேட தொடங்குகிறார்கள். தேடலின் முடிவில், அவளுக்கு என்ன நடந்தது என்பது அதிரவைக்கிறது… இயக்கம் எஸ்யு அருண்குமார்
பாசம் காட்டும் தருணங்களில் உணர்வுபூர்வமாக, குழந்தைகளை சீரழித்த சைக்கோவை அழிக்க புறப்படும்போது உணர்ச்சிபூர்வமாக என இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார் சித்தார்த்.
பெண் குழந்தைகளைப் பெற்றோர், பள்ளிக்கூட ஆசிரியர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய, சமூகத்துக்கு மிகமிக அவசியமான இந்த படத்தை தயாரித்திருப்பதும் அவரே. இரண்டுக்காகவும் சித்தார்த்தை தாராளமாய் பாராட்டலாம்.
சித்தார்த்துக்கு ஜோடியாக வருகிற நிமிஷா சஜயனின் சதை திரண்ட முகத்தில் கதைக்கேற்ற நடிப்பு கேமராவை நோக்கி பாய்ந்திருக்கிறது. அவருக்கும் சித்தார்த்துக்குமான மெல்லிய காதல் கவர்கிறது.
சுந்தரியாக வருகிற சிறுமியின் பொருத்தமான நடிப்பைப் பார்க்கும்போது பரிதாபம் வருகிறது; பெரிதாய் பாராட்டத் தோன்றுகிறது. பொன்னியாக வருகிற குழந்தையும் நடிப்புப் பங்களிப்பில் கவர்கிறாள்.
கதாநாயகனுக்கு அண்ணியாக, நண்பனாக வருகிறவர்களின் நடிப்பு நிறைவாக இருக்கிறது. மற்ற கதாபாத்திரங்களை ஏற்றிருப்பவர்களும் கதையின் தன்மையுணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வருகிற நடுத்தர வயதுப் பெண்ணின் நடிப்பு தனித்துவம்.
சந்தோஷ் நாராயணன், திபு நைனன் தாமஸ் இருவரின் இசையில் பாடல்களில் உயிரோட்டம் ததும்புகிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை கதைக்களத்தை பலமாக்கியிருக்கிறது.
பாலாஜி சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில் கதை நிகழ்விடமான பழனியின் சுற்றுவட்டார அழகு கூடுதலாகியிருக்கிறது.
திரைக்கதையின் போக்கு பெண் குழந்தைகளைப் பெற்றவர்களை பயமுறுத்துவதாக இருந்தாலும், அதிலிருந்து விழிப்புணர்வுப் பாடம் கற்கலாம் என்பதை மறுக்க முடியாது.

