ஏராளமான திருப்பங்களை சாலைகளில் வைத்திருக்கும் ஊட்டி, குன்னூர் மலைப்பகுதி கதைக்களம். ஏகப்பட்ட திருப்பங்களை கதையோட்டத்தில் வைத்திருக்கும் ‘அதோமுகம்.’
அந்த இளைஞன் தன் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க ஆசைப்பட்டு, அதற்காக ஒரு விஷயத்தை செய்யப்போய் ஜாலியாக பல்பு வாங்குகிறான். அடுத்தகட்டமாக மனைவியின் நடவடிக்கைகளை அவளுக்குத் தெரியாமல் கவனித்து, அதற்கேற்றபடி அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைக்கிறான். அதற்காக அவள் போனில் ஒரு ரகசிய ஆப்பை இறக்கிவைக்கிறான். அதன் மூலம் அவளைக் கண்காணிக்க கண்காணிக்க, அவளது நடவடிக்கைகள் அவனுக்கு உயிர் பயத்தை உருவாக்குகிறது.
அவனுக்கு உயிர் பயம் உருவாக்குகிற அளவுக்கு அவள் என்ன செய்தாள்? அதன் விளைவுகள் என்ன?
இந்த கேள்விகளுக்கு பதில் தரும்படி இயக்குநர் சுனில்தேவ் அமைத்திருக்கும் திரைக்கதையில் சரிவிகிதத்தில் கலந்திருக்கிறது சுறுசுறுப்பும் விறுவிறுப்பும்…
நடித்திருப்பவர்களில் ஒருசிலர் தவிர மற்றவர்கள் புதுமுகங்கள். நாயகனும் அப்படியே. ஆனாலும் அது தன் நடிப்பில் தெரியாதபடி பயம், பதட்டம், தான் விரித்த வலையில் தானே சிக்கிய பரிதாபம் என அப்பாவித்தனத்துக்கான அத்தனை உணர்வுகளையும் அளவாக, அழகாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார் சித்தார்த். (சீனியர் நடிகர் அருண்பாண்டியனின் சகோதரியின் மகனாம் இவர்.)
சித்தார்த்தின் மனைவியாக சைதன்யா பிரதாப். ஆரம்பத்தில் அவரது நடவடிக்கைகள் தாறுமாறாய் தடதடக்க, அடுத்தடுத்த காட்சிகளில் அம்மணி பெரிதாய் ஏதோ செய்யப்போகிறார் என்று எதிர்பார்க்கிறோம். ஏமாற்றம் தராமல் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறார். படம் முழுக்க சாந்தமுகம் காட்டிக்கொண்டே சட்சட்டென வேறொரு அவதாரத்திற்கு தாவுபவர் சிறையில் கணவனுடன் பேசும்போது காட்டும் அலட்டலான முகபாவம் செம கெத்து.
கிளைமாக்ஸில் எட்டிப் பார்க்கிற அருண்பாண்டியன் அதிரடியான பங்களிப்பை அலட்டலின்றி தந்திருக்கிறார். இரண்டாம் பாகத்துக்கும் அவரை வைத்தே லீடு கொடுத்திருக்கிறது ஸ்கிரீன்பிளே.
ஆனந்த் நாக், மேத்யூ வர்கீஸ், சரித்திரன் என மற்ற நடிகர்கள் குறையின்றி நடித்திருக்க,
கிரைம் திரில்லர் கதையின் மூடுக்கேற்ற பனிப் பொழிவுமிக்க பச்சைப் பசேல் மலைப் பகுதியின் நீள அகலங்களை அதன் தன்மை மாறாமல் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருண் விஜய்குமார்.
கதையில் திருப்பங்கள் அதிகரிக்க அதிகரிக்க பின்னணி இசையில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார் சரண் ராகவன்.
மொபைல் போன்கள் எப்படியான குற்றச் செயல்களுக்கெல்லாம் பயன்படுகின்றன என்பதை அறிந்திருக்கும் நமக்கு, அதன் ஆபத்தான இன்னொரு முகத்தைக் காட்டியிருப்பது அதோமுகத்தின் தனித்துவம்!