ஜமா என்கிற சீரியஸான படத்தை இயக்கிய பாரி இளவழகனின் இயக்கத்தில் சிரித்து ரசிக்கும்படியாக ‘அன்பே டயானா.’
இந்த மதத்தைச் சேர்ந்த ஹீரோ தன்னுடன் நட்பாகப் பழகும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணைக் காதலிக்க, அவள் காதலை மறுத்து நட்பைத் தொடர்கிறாள். ஹீரோ அப்செட்டாகிறான். ஒரு கட்டத்தில், அவள் அவனை விரும்புவதாக சொல்கிற சூழ்நிலையில், அவள் நமக்கு வேண்டாம் என அவன் ஒதுங்குகிறான்.
அதற்கான காரணம் சிலர் பார்வையில் நியாயமாக இருக்கலாம்; சிலர் பார்வையில் தவறாக படலாம். எது எப்படியோ பிரிகிற சூழ்நிலைக்கு வந்து விட்ட காதலர்களின் மனம் மாறியதா? மண வாழ்க்கையில் இணைந்தார்களா? என்பது மீதிக் கதை…
ஹீரோவாக பாரி இளவழகன். ஜாலியான இளைஞனாக காதலியை சுற்றிச் சுற்றி வருகிறார். காதலியைப் பற்றி, அவருடைய குடும்பத்தின் பழக்க வழக்கம் பற்றி தெரிந்து கொண்டபின் அவள் தன் குடும்பத்துக்கு ஒத்து வர மாட்டாள் என ஒதுங்குகிறார். பல வருடங்களாக பழகியும் காதலிக்கும் பெண்ணைப் பற்றியும் அவரது குடும்பம் பற்றியும் எதுவும் தெரியாமலிருக்கிறார் என்பதை ஏற்க முடியவில்லை. அம்மா மீதான பயத்தில் காதலே வேண்டாம் என்ற முடிவுக்கு வருகிற அவரது கதாபாத்திரம் பெருமைக்குரியதாக இல்லை. நடிப்பில் குறையில்லை.
காதலியாக ரம்யா ரங்கநாதன். ஆங்கிலோ இந்தியப் பெண்ணான அவர், காதலனின் ஆன்மிக ஈடுபாடு அதிகமுள்ள அம்மாவுக்கும், அவன் குடும்பத்துக்கும் ஏற்றபடி தன்னை மாற்றிக்கொள்ள தயாராக இருப்பதாக சொல்லும் விதமும், முடிவெடுக்கக் கூடாது – எடுத்துவிட்டால் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் என்ற நோக்கமும், காதலனாக இருந்தாலும் தன் உணர்வை மதிக்காத போது சுய மரியாதையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற உறுதியும் அவரது கேரக்டர் மீது ஒருவித உயர் மதிப்பை உருவாக்குகிறது. அழகும் இளமையும் அசத்த, அவர் அணியும் உடைகளில் மெல்லிய கவர்ச்சி ததும்புகிறது. நடிப்பு உணர்ச்சிகளும் உணர்வுகளும் சரிவிகிதத்தில் கலந்தாக கதைக்கு போதுமான அளவில் இருக்கிறது.
மனைவிக்குப் பயந்தவர், குடிபோதையில் மிதப்பவர், மகன் மீது பாசத்தை அள்ளிக் கொட்டுபவர். அப்படியொரு ஆசாமியாக ஹீரோவுக்கு அப்பாவாக வருகிற சேத்தன் காட்சிக்கு காட்சி கலகலபூட்டுகிறார்.
தன் வீட்டில் தான் விரும்பியதுதான் நடக்க வேண்டும், வீட்டில் உள்ளவர்கள் தான் சொல்வதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்ட, ஹீரோவின் அம்மா கேரக்டருக்கு ஆளுமையான நடிப்பால் பலம் சேர்த்திருக்கிறார் ரோஜா செல்வமணி. கல்யாண விஷயத்தில் சாதிப்பாகுபாடு பார்ப்பதில் பலனில்லை என்ற கருத்தை வலியுறுத்தவும் பயன்பட்டிருக்கிறார்.
பரிதாபங்கள் கோபி ஹீரோவின் நண்பனாக வந்து வித்தியாசமாக பெங்களூர் தமிழ் பேசி காமெடி கலகலப்புக்கு உதவுகிறார். முக்கியத்துவமுள்ள கேரக்டர்களில் செல் முருகன், நிகிலா சங்கர், இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்டோரின் நடிப்பு கச்சிதம்.
பரத் சங்கர் இசையில் பாடல்கள் மனதில் பதிவது சந்தேகம்தான் என்றாலும் கேட்க இதம். பின்னணி இசை கச்சிதம். சென்னை பெரம்பூரை அங்குலம் அங்குலமாக சுற்றிக் காட்டுகிறார் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட்.
இந்த மத இளைஞன், ஆங்கிலோ இந்தியப் பெண்ணைக் காதலிக்கிற கதை என்றதுமே பிரச்சனை பூகம்பமாக வெடித்துச் சிதறும் என்ற நினைப்பு எட்டிப் பார்க்கிறது. ஆனால், அப்படி கத்தி ரத்த வன்முறை ஏதுமில்லாமல் மதமும் கலாச்சாரமும் வேறுபட்ட ஆணும் பெண்ணும் காதலிப்பதில் இருக்கும் சிக்கல்களை அலசி, காமெடி கலாட்டாக்களுடன் பயணித்து ஹேப்பி என்டிங்கை எட்டுகிற இந்த படம் குடும்பத்தோடு பார்ப்பதற்கு நல்ல சாய்ஸ்.
Rating 3 / 5 

