தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன், நாட்டைக் காக்கும் ராணுவப் பணியில் உயிர்த் தியாகம் செய்த வரலாற்றின் திரை வடிவம்.
முகுந்தாக சிவகார்த்திகேயன். ராணுவத்தில் சேர வெண்டுமென்ற முகுந்தின் சிறுவயதுக் கனவு, தொடர் முயற்சியின் மூலம் தகுதியான வயதில் நிறைவேறுகிறது. அப்படி ராணுவ வீரனாக பணியில் சேர்ந்த முகுந்த் மேஜர் என்ற உயரதிகாரத்தை அடைந்து, பயங்கரவாத தாக்குதலில் 2014 ஏப்ரல் மாத இறுதியில் உயிரிழக்கிறார். இந்த அத்தனை உண்மைகளும் காட்சிகளாக விரிய அத்தனைக்கும் உடற்கட்டாலும் பொருத்தமான நடிப்பாலும் உயிர் தந்திருக்கிறார். ரொமான்ஸில் ஈடுபடும் காதலன், கரிசனம் காட்டும் கணவன், மகள் மீது பாசம் பரிமாறும் தந்தை என இன்னொரு பக்கம் நேர்த்தியான நடிப்பைக் கடத்தியிருக்கிறார்.
கதாநாயகனின் காதல் மனைவியாக சாய் பல்லவி. காதல், உற்சாகம், ஏக்கம், கோபம், இழப்பு, பரிதாபம் என காட்சிக்கு காட்சி வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய கனமான பாத்திரத்தை இயல்பான நடிப்பால் தூக்கிச் சுமந்திருக்கும் அவர், கணவன் இறந்த செய்தி கேட்டு தான் அழாமல் தியேட்டரையே அழ வைத்திருப்பதுதான் தீபாவளியன்று திரையுலகுக்கு கிடைத்த தலைப்புச் செய்தி.
படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள்… அதையெல்லாம் நிரப்பியிருப்பவர்கள் சரியான தேர்வு; அவர்களிடமிருந்து கிடைத்திருப்பது கச்சிதமான நடிப்பு.
ஜீ வி பிரகாஷ் இசையில் ‘மின்னலே’ பாடல் கிறங்கடிக்கிறது. பின்னணி இசையில் காட்சிகளின் தேவைக்கேற்ப தென்றலும் வீசுகிறது; புயல்ப் பாய்ச்சலும் இருக்கிறது.
நாட்டின் எல்லைப் பகுதி, ராணுவ முகாம்கள், பயங்கரவாதிகளின் தாக்குதல் நடக்குமிடம் என படத்தின் வலுவான காட்சிகள் சதீஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் தரமாக அரங்கேறியிருக்கின்றன.
உண்மையான வரலாற்றுக்கு களங்கம் ஏற்படுத்திவிடாதபடி கொஞ்சமாய் சினிமாத்தனங்கள் சேர்த்திருக்கும் இந்த படைப்பின் மூலம், ராணுவ வீரர்களின் வாழ்க்கை, பணிச் சூழல் என விரிவாக காட்சிப்படுத்தி,
ராணுவம் மீதும் ராணுவ வீரர்கள் மீதும் மதிப்பை உயர்த்தியிருக்கிற ராஜ்குமார் பெரியசாமி, பிரமாண்டமான கமர்சியல் படங்களை தரமாக தருகிற இயக்குநர்களின் வரிசையில் இணைகிறார்.
வேறென்ன… வெற்றியை ருசித்துக் கொண்டிருக்கும் படக்குழு அடுத்ததாக, குவியப்போகும் விருதுகளை அடுக்கி அழகு பார்க்கத் தயாராகலாம்!

