‘அம்மான்னா சும்மா இல்லேடா’ என்ற பாடல் வரிகளுக்கு உயிர் தந்திருக்கும் மலையாளப் படம். தமிழ் மொழியாக்கத்தில் ஏப்ரல் 18; 2025-ல் திரையரங்குகளில் வெளியாகிற ‘அம்… ஆ.’
மலை கிராமம் ஒன்றில் குழந்தையுடன் வசிக்கிறார் அம்மணியம்மா. அந்த ஊருக்கு புதியவர் ஒருவர் வருகிறார். அவர், தன்னை அந்த ஊருக்கு சாலை வசதி செய்து கொடுப்பதற்கு வந்தவர் போல் காட்டிக் கொள்கிறார். ஊர்த் தலைவருடன் நெருங்கிப் பழகி ஊரை சுற்றிப் பார்க்கிறார். நாட்கள் போகப்போக, அவர் குழந்தையுடன் இருக்கும் அந்த பெண்ணை சந்திப்பதற்காக வந்தவர் என்பது தெரிகிறது. அவரை சந்தித்ததும் அந்த பெண் பயந்து நடுங்குகிறார்; குழந்தை பறிபோய்விடுமோ என பதறுகிறார்.
இப்படி சூடுபிடித்து, அவர் யார்? அந்த பெண் யார்? என்பதை எடுத்துச் சொல்லி நகர்கிறது ‘அம் ஆ’வின் திரைக்கதை… இயக்கம் தாமஸ் செபாஸ்டியன்
பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கிற, குழந்தையை பாசமாக வளர்க்கிற, குழந்தையை இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் தவிக்கிற அம்மணியம்மாள் தமிழ் சினிமாக்களில் காமெடி கதாபாத்திரங்களில் ரசிக்க வைக்கிற தேவதர்ஷினி. அவரது தோற்ற மாற்றமும் நடிப்பிலிருக்கும் தரமும் ஆச்சரியப்பட வைக்கிறது.
ஆரம்பகட்ட நடவடிக்கைகளில் வில்லன் போல நினைக்க வைத்து, இடைவேளைக்கு பிறகு கதையின் நாயகனாய் உருமாறி நிற்கிற திலீஷ் போத்தனின் நடிப்பு இயல்பாக இருக்கிறது.
கதையின் மையப்பகுதியாய் இருக்கிற குழந்தையைப் பெற்றெடுத்த வாடகைத் தாய், திலீஷ் போத்தனுடன் கலகலப்பாய் கலந்து பழகுகிற லோக்கல் அரசியல்வாதியாக ஜாபர் இடுக்கி என மற்ற அத்தனைப் பேரின் நடிப்பிலும் ஆழமிருக்கிறது.
கோபி சுந்தரின் பின்னணி இசையும், பாடல்களில் தவழ விட்டிருக்கும் மென்மையும், கேரள மலைப்பகுதிகளின் அழகை தன்மை குறையாமல் திரையில் கொண்டு வந்திருக்கும் அனிஷ்லாலில் ஒளிப்பதிவு என பல அம்சங்கள் கதையோட்டத்தின் பலம்.
அம்மா _ பிள்ளை பாசப்பிணைப்பை மையப்படுத்திய படம்தான். ஆனால், இதுவரை எந்த படமும் எடுத்துச் சொல்லாத வாடகைத் தாய் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்துக்காட்டியிருப்பதால் இந்த அம்… ஆ’ தனித்துவமான படங்களின் வரிசையில் இணைகிறது.