சீரியல் கில்லர் கதைகளை விதவிதமாய் பார்த்திருக்கிறோம். இது, சிரிக்காதவர்களைக் கொலை செய்து சிரிக்க வைக்கிற கில்லரின் கதை.
தான் கொலை செய்பவர்களின் வாயைக் கிழித்து சிரித்த முகமாக்குவதை வழக்கமாக வைத்திருக்கும் சீரியல் கில்லர் கொல்லப்பட்டதாக அறிவிக்கிறது சிபிசிஐடி. சில வருடங்கள் கழித்து பழையபடியே கொலைகளும் வாய் கிழிப்புகளும் தொடர, பழைய மெத்தடில் புதிய சீரியல் கில்லர் களமிறங்கியதாக கருதுகிறது காவல்துறை.
முன்பு தொடர் கொலைகள் நடந்தபோது துப்பு துலக்குவதில் ஈடுபட்ட சிபிசிஐடி அதிகாரி நெடுமாறன் (சரத்குமார்) அதை மறுக்கிறார்.
கொலைகாரன் புதியவரல்ல என்றால், பழைய கொலைகாரன் உயிருடன் இருக்கிறான் என்றாகிறது. அப்படியெனில் கொலைகாரனை கொன்றுவிட்டதாக சிபிசிஐடி சொன்னது பொய்யான தகவல் என நினைக்க வேண்டியிருக்கிறது.
எது உண்மை? முன்னர் நடந்தது என்ன? இப்போது நடப்பது என்ன? சீரியல் கில்லரின் நோக்கம் என்ன? அந்த கில்லரை பிடிக்க முடிந்ததா இல்லையா? படத்தின் முன்பாதி இப்படி பல வினாக்களை உருவாக்க பின்பாதி பரபரப்பாக பதில் தருகிறது.
காவல்துறை அதிகாரியாக கம்பீரமாக நடிப்பது சரத்குமாருக்கு பழகிய விஷயம். இதில் பழகியபடியும் அல்சைமரால் பாதிக்கப்பட்டவராகவும் இரு பரிமாணங்களில் அசத்தலான நடிப்பைத் தந்திருக்கிறார். அவர் நடித்திருக்கும் 150-வது படம் இது.
பணியில் சீனியரான சரத்குமாரின் அனுபவத்தை மதிப்பதும், நடக்கும் கொலைகளுக்கும் அவருக்கும் சம்பந்தம் இருக்கலாம் என சந்தேகிப்பதுமாக ஸ்ரீகுமார், அவரது அசிஸ்டெண்டாக அழகாலும் இளமையாலும் கவர்கிற சிஜாரோஸ், சரத்குமாரின் உயரதிகாரியாக மிடுக்காக நடமாடியிருக்கிற சுரேஷ்மேனன், குறிப்பிடத்தக்க கேரக்டரில் ஜார்ஜ் மரியான், ஆச்சரியப்படுத்தும் பாத்திரத்தில் கலையரசன், தன் கேரக்டருக்கேற்ற பயத்தையும் பதட்டத்தையும் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கும் சிறுமி ஆலியா என அத்தனைப் பேரும் முழு ஈடுபாடு காட்டியிருப்பதை அவரவர் பங்களிப்பில் உணர முடிகிறது.
கவாஸ்கர் அவினாஷ் பின்னணி இசையால் முடிந்தவரை மிரட்ட, காட்சிகளை கச்சிதமாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன்.

