நடிகை பிரியங்கா உபேந்த்ரா ‘ஆக்ஷன் குயின்’ என்ற பட்டத்துடன் ஆக்ஷன் நாயகியாக களமிறங்கியுள்ள படம் ‘உக்ராவதாரம்.’
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மையமாக வைத்து ஆக்ஷன் கமர்ஷியல் படமாக, பான் இந்தியா படைப்பாக உருவாகியுள்ள இந்த படத்தில் ரோபோ கணேஷ், நட்ராஜ், சுமன், சாய் தீனா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் நவம்பர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த அக்டோபர் 21-ம் தேதி சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது. இயக்குநர் பேரரசு சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
நிகழ்வில் இயக்குநர் குருமூர்த்தி பேசுகையில், “பிரியங்கா மேடமுக்கு நன்றி, எங்கள் படத்துக்கு ஆதரவளிக்க வந்திருக்கும் பேரரசு சாருக்கு நன்றி. ஊடகத்தின் மூலம் தான் எங்கள் படம் மக்களுக்கு தெரியப் போகிறது, எனவே உங்களுடைய உதவியும் எங்களுக்கு தேவை. இந்த படம் தற்போது நாட்டில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சினிமாவுக்காக கமர்ஷியல் விசயங்களை சேர்த்திருந்தாலும், முழுக்க முழுக்க நாட்டில் நடக்கும் சம்பவங்களை பின்னணியாக கொண்டு தான் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம்.
தற்போதைய காலக்கட்டத்தில், ஒவ்வொருவரும் தங்களது பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி இல்லாமல் அனைத்து பெண்களையும் தங்கள் வீட்டு பெண்களாக பார்க்க வேண்டும், அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். அத்தகைய விசயத்தை படத்தில் சொல்லியிருக்கிறோம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டு தான் வருகிறது. அப்படிப்பட்ட குற்றங்களை எப்படி தடுப்பது, என்பது குறித்த விழிப்புணர்வாகவும், நாட்டுக்கு தேவையான நல்ல மெசஜ் சொல்லும் படமாகவும் இது இருக்கும். தற்போதைய சூழலில் ஊடகங்கள் இல்லை என்றால், நாட்டில் அதிகமான தவறுகள் நடக்கும். காரணம், இன்று நாட்டில் எந்த மூளையில் எது நடந்தாலும் அதை நீங்கள் உலகத்திற்கு தெரியப்படுத்தி விடுகிறீர்கள், அதனால் தான் தவறு செய்ய நினைப்பவர்கள் பயப்படுகிறார்கள்.
குற்றங்கள் குறைவாக நடப்பதற்கு ஊடகங்கள் தான் மிக முக்கிய காரணம், ஊடகங்கள் இல்லை என்றால் குற்றங்கள் அதிகரித்துவிடும். அதனால், இந்த படத்தை மக்களிடம் ஊடகங்கள் கொண்டு சேர்க்க வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. ஐந்து மொழிகளிலும் ஒரே நாளில் வெளியாகிறது. எங்களுக்கு நீங்கள் தான் ஆதரவளிக்க வேண்டும். இந்த படத்தில் நல்ல மெசஜ் சொல்லியிருக்கிறோம், இந்த படத்தை பார்த்து நான்கு பேர் திருந்தினாலே எங்களுக்கு போதும், நன்றி” என்றார்.
படத்தின் நாயகி பிரியங்கா உபேந்தரா பேசியபோது, “எங்களை வாழ்த்த வந்திருக்கும் பேரரசு சாருக்கு நன்றி, ஊடகங்களுக்கு நன்றி. ரொம்ப நாளைக்குப் பிறகு உங்களை பார்ப்பது மகிழ்ச்சி. சென்னை எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கிருக்கும் உணவு, கடற்கரை என அனைத்து விசயங்களும் எனக்கு பிடிக்கும். நிறைய படங்களின் நல்ல நினைவுகள் என் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது.
‘உக்ராவதாரம்’ எனக்கு முக்கியமான படம், காரணம் இது என் முதல் ஆக்ஷன் படம். இதில் நான் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன். இது நல்ல மெசஜ் சொல்லும் படமாக மட்டும் இன்றி, காவல்துறை பெண்களின் பாதுகாப்பில் எப்படி பங்கு வகிக்கிறது என்பதை சொல்லும் படமாகவும் இருக்கும். கமர்ஷியல் அம்சங்கள், சண்டைக்காட்சிகள் உள்ளிட்டவைகளை கடந்து பெண்களின் சக்தி மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மிக சிறப்பாக காண்பித்திருக்கிறார்கள். எனவே, என் சினிமா பயணத்தில் இது மிகவும் முக்கியமான படம்.
இந்த படக்குழுவுடன் பணியாற்றியது இனிப்பான நினைவுகளாக இருக்கிறது. இயக்குநர் குருமூர்த்தி சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. ஊடக நண்பர்கள் எனக்கு எப்போதும் ஆதரவளித்து வந்திருக்கிறீர்கள், தொடர்ந்து உங்கள் ஆதரவு கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
அஜித் சாரின் ‘ராஜா’, விக்ரம் சாருடன் ‘காதல் சடுகுடு’ உள்ளிட்ட 5 தமிழ் படங்களில் நடித்திருக்கிறேன். என்னை இப்போதும் தமிழ் ரசிகர்கள் நினைவு வைத்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று ஒரு பேட்டியில் கூட, “நீங்க தயிர் சாதம் தானே..” என்று சொன்னார்கள். அந்த அளவுக்கு என் பட காட்சிகள் மக்கள் மனதில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் அதிகமான தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
இந்த படத்தில் நல்ல மெசஜ் சொல்லியிருக்கிறோம். இது நிச்சயம் மக்கள் பார்க்க வேண்டிய படம்” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசியபோது, ”நாட்டில் நடக்கும் குற்ற சம்பவங்களை மையமாக கொண்டு இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். குற்றங்களிலேயே மிக கொடிய குற்றம் பாலியல் குற்றம் தான். நாட்டில் இப்போது இதுபோன்ற பல குற்றங்கள் நடக்கிறது. இதுபோன்ற கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் தான் குற்றங்கள் குறையும்.
ராமர் அவதாரம், நரசிம்மர் அவதாரம், விஷ்ணு அவதாரம் என நிறைய அவதாரங்களை பார்த்து இருக்கிறோம், இப்போது உக்ராவதாரத்தை பார்க்கிறோம். அவதாரம் என்றாலே வெற்றி தான், அதனால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். படத்தின் இயக்குநர் குருமூர்த்தி, ஒளிப்பதிவாளர் நந்தா குமார், ரோபோ கணேஷ் என அனைவருக்கும் வாழ்த்துகள். இங்கு பேசியவர்கள் பிரியங்கா மேடம் பற்றி சொல்லும் அழகு தேவதையாக இருந்தார்கள், என்று சொன்னார்கள். அவர்கள் இப்போதும் அழகாக, தேவதையாக இருக்கிறார்கள். ராஜா படத்தில் அவர் இன்னோசண்டாக இருந்தார், அதனால் தயிர் சாதம் என்று சொன்னார்கள், ஆனால் இந்த படத்தில் காரசாரமாக இருக்கிறார். டிரைலரில் அவரது சண்டைக்காட்சிகள் பட்டய கிளப்பிடுச்சு” என்றார்.
படக்குழு: பிரியங்கா உபேந்த்ரா வழங்க, எஸ்.ஜி.எஸ் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஜி.சதீஷ் தயாரித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் குருமூர்த்தி கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். நந்தா குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணா பஸ்றுரு இசை அமைத்துள்ளார். வேங்கி படத்தொகுப்பு செய்ய, ஆக்ஷன் காட்சிகளை மாஸ் மாதா, அஷோக், சிவு ஆகியோர் வடிவமைத்துள்ளனர். பாடல்கள் மற்றும் வசனம் கின்ணாழ் ராஜ் எழுதியிருக்கிறார். கோவிந்தராஜ் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.
அஜித்தின் ‘ராஜா’, விக்ரமின் ‘காதல் சடுகுடு’, ‘ஜனனம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா உபேந்த்ரா, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார்.